Type to search

Headlines Local News News

வவுனியாவில் தொடரும் நள்ளிரவுத் திருட்டுகள்

Share

வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், நள்ளிரவு வேளைகளில் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழையும் நபர்கள் பெறுமதியான பொருட்களைத் திருடிச் செல்கின்றனர். 

குறிப்பாக, வீட்டின் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இவ்வாறான திட்டமிட்ட திருட்டுகள் அரங்கேற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கிட்டிய நாட்களில் மட்டும் இப்பகுதியில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமது பகுதிகளில் நிலவும் இந்த அச்சச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இரவு நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை விரைவாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பூந்தோட்டம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link