மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் இராணுவம் தெரிவிப்பு
Share
அமெரிக்காவுடன் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையான அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்கா இதனை ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் குறிவைத்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தற்போதைய நிச்சயமற்ற சூழலில் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்ற கருத்தில் மன்னர் சார்லஸ் உடன்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. மேலும், ராணுவத் தயார்நிலை தொடர்வதாகவும், இலக்குகள் மற்றும் உபகரணங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் செய்தித் தொடர்பாளர் அமீர் அக்ராமினியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


