மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தகவல்
Share
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின்படி அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல் நிலவுகிறது. இதற்குத் தேவையான தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை முழுமை பெறாததே இதற்குக் காரணமாகும்.
எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாததால், சபாநாயகரால் பிரதமரின் தலைமையில் ஐவர் கொண்ட மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.
இருப்பினும், இக்குழு தனது அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட இரண்டு மாத காலத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறான தொடர்ச்சியான தடங்கல்களால் மாகாணசபைத் தேர்தலை எந்த முறையின்கீழ் நடத்துவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
எனவே, நாடாளுமன்ற செயற்குழு அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி, மூன்று மாத காலத்திற்குள் இதற்கான இறுதிப் பரிந்துரையை முன்வைத்து இந்த முரண்பாட்டுக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


