Type to search

Headlines Local News News

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் வரை இழப்பீடு

Share

கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கான மதிப்பீடுகளுக்குப் பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்போது நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பயிர்களுக்காக இவ்வாறு இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சேதமடைந்த பயிர்கள் தொடர்பாக அடுத்த 14 நாட்களுக்குள், அந்தந்த விவசாய சேவை நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத விபரங்களை அறிவிக்கும் பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும். 

இதற்காக விவசாயிகளிடம் இருந்து எந்தவொரு காப்புறுதி தவணைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களில் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், அந்த நீர் வற்றிய பின்னர் சேதமடைந்த பயிர்நிலங்களின் பரப்பளவைக் கண்டறிய முடியும். 

2026ஆம் ஆண்டு யல பருவகால பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் ஏற்பட்ட இந்த அதிக மழை காரணமாக சேதமடைந்த பயிர் அமைப்புகள், பயிர்ச்செய்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே காணப்படுகின்றன. 

நாட்டின் விவசாய மக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்பதுடன், தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாய மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link