போலி வைத்தியர் ஒருவர் பொலனறுவையில் கைது
Share
வைத்தியர் எனத் தன்னை அடையாளப்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 59 வயதுடைய நபர் ஒருவர் பொலன்னறுவை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், பன்னல பகுதியைச் சேர்ந்த இவர், செவ்வாய்க்கிழமை (05) இரவு பொலன்னறுவை தீப உயன பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் பொரளை, கண்டி, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களால் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டு வருட சிறைத் தண்டனையையும் அனுபவித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹிங்குராக்கொட வைத்தியசாலையின் மகப்பேறு வார்டில் பணியாற்றும் வைத்தியர் எனப் பொய்யான அடையாள அட்டையைப் பயன்படுத்தி இவர் பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து ஸ்டெதாஸ்கோப் , வைத்தியருக்கான சீருடை, போலி அடையாள அட்டை உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


