குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு ஜூன் 17 இல் விசாரணை
Share
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 17 ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், வழக்கு விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதி தரப்பிற்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்ட வழக்கு விசாரணையை நிறைவு செய்த நீதவான், ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதாக உத்தரவிட்டார்.
அன்றைய தினம் வழக்கின் இரண்டு சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
2016 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் மேலாளராக பணியாற்றிய போது, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் தார் இடுவதற்கான கொள்முதல் நடவடிக்கையின் போது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாகச் செயற்பட்டு, அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதன் மூலம் “ஊழல்” எனும் குற்றத்தைச் செய்ததாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


