கடும் வயிற்றுவலி; வாந்தி எடுத்த சிறுமி பலி! யாழில் சம்பவம்
Share
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 13ஆம் திகதி குறித்த சிறுமிக்கு வயிற்றுவலியுடன் கூடிய வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு சிறுமி வாந்தி எடுத்துள்ளார்.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, அதிகாலை 4:30 மணியளவில் சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மதியமளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது:
சிறுமிக்கு குடல்வளரி (Appendicitis) பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட கடும் வயிற்றுவலியின் போது அவர் வாந்தி எடுத்துள்ளார்.
அந்த வாந்தி எதிர்பாராத விதமாகச் சுவாசக் குழாயினுள் (Aspiration) சென்றமையே மரணம் சம்பவிக்கக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


