‘எல் நினோ’ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
Share
எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை, ஜனாதிபதியின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது,வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு ஜனாதிபதி சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பல நிறுவனங்களின் கீழ் சிதறிக்காணப்படும் பேரிடர் முகாமைத்துவப் பணிகளை ஒரே மத்திய நிலையத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள “தேசிய பேரிடர் முகாமைத்துவ ஒருங்கிணைந்த பொறிமுறை” குறித்த குழு அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.
மண்ணச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்காக, நான்கு வருட காலப்பகுதிக்குள் செயல்படுத்தக்கூடிய திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு முப்படைகளுக்கும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை மேம்படுத்துதல், பிரதேச மட்டத்தில் பேரிடர் உபகரணங்களின் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு மையங்களை நிறுவுதல் குறித்தும் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


