Type to search

Headlines Local News News

எரிபொருள் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது

Share

உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருள் விலையில் ஓரளவு குறைவு காணப்படுகின்ற போதிலும், மத்திய கிழக்கு போருக்கு முன்னர் உலக சந்தையில் நிலவிய எரிபொருள் விலையை விட தற்போதைய விலை இன்னும் அதிகமாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், இன்றைய தினத்திற்கான (29) உலக சந்தையின் எரிபொருள் விலை இன்று பிற்பகலுக்குள் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதற்கமைய அந்த நிலைமைகளை பரிசீலித்த பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். 

ஆனால், எரிபொருள் விலைகள் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எரிபொருள் விலை திருத்தம் குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையிலேயே விற்பனை செய்ய தீர்மானிக்கப்படுமா என்பது அந்த பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், நேற்று (28) ‘WTI’ ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அந்த கப்பலில் 89,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், எதிர்வரும் 31ஆம் திகதியளவில் ‘மெர்பன்’ ரக மசகு எண்ணெய் கப்பல் ஒன்று மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அந்த கப்பலில் 95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் உள்ளதாகவும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link