இன்று இலங்கை வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி!
Share
பகிர்
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அவர்கள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் வருமாறு:
- பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி: பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், பணியாளர் பரிமாற்றத் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பாக மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சுக்கும், இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- கல்வி மற்றும் தொழிற்துறை: ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்சார் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக மாலைதீவின் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சுக்கும், இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- சுகாதாரம் மற்றும் கல்விசார் ஒத்துழைப்பு: மாலைதீவு குடியரசின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கும், இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- சுற்றுலாத்துறை: மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- ஆவணக்காப்பகம்: மாலைதீவு குடியரசின் தேசிய ஆவணக்காப்பகத்திற்கும், இலங்கையின் தேசிய ஆவணக்காப்ப திணைக்களத்திற்கும் இடையில் ஆவணக்காப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு: மாலைதீவு குடியரசின் இளைஞர் வலுவூட்டல் மற்றும் உடற்தகுதி அமைச்சுக்கும், இலங்கையின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.


