Type to search

Headlines Local News News

அம்பாறையில் விடுதலைப்புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு

Share

அம்பாறை மாவட்டம்,  கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது.

திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக,   கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய காட்டுப் பகுதியில்  விசேட ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காட்டுப் பகுதியில் இருந்த பெரிய மரப்பொந்து ஒன்றினுள் மிகவும் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கியும், அதற்குப் பயன்படுத்தப்படும் ஏழு (07) தோட்டாக்களும் அதிரடிப்படையினரால்  மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கஞ்சிகுடியாறு பகுதியைக் கண்காணிக்கும் தமணபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவற்றை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

யுத்தம் கடந்து பல வருடங்கள் ஆன நிலையில், குறித்த ஆயுதம் அங்கு எவ்வாறு வந்தது? அண்மைக் காலத்தில் யாரேனும் அதை அங்கு மறைத்து வைத்தார்களா? அல்லது யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டதா என்ற கோணங்களில்  பாதுகாப்பு பிரிவினரும் தமண பொலிஸாரும் இணைந்து   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link