அடுத்த மாதம் முதல் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு
Share
அதிகரித்துள்ள எரிபொருள் விலை காரணமாக நாடு தழுவிய ரீதியில் தனியார் பேருந்து இயக்கம் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், பேருந்து உரிமையாளர்களின் நஷ்டத்தைக் குறைப்பதற்காக பேருந்து பயணத் தடவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில், அடுத்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தத்தின் போது, பேருந்து கட்டணங்கள் சுமார் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் எனவும், அதன் போது ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 35 ரூபாவைத் தாண்டிச் செல்லக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்து சேவைகளுக்கான ஒருங்கிணைப்புகள் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளினூடாகவே மேற்கொள்ளப்படுவதால், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பயணத் தடவைகளைத் திருத்தியமைப்பதற்காக அந்த அதிகார சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அதிகாரிகளிடம் இது தொடர்பான கடிதங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


