பல்கலைக்கழக மாணவி டெங்கு நோய்க்கு பலி
Share
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார்.
சந்தலியின் மறைவு குறித்து அவரது சக மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், இதுபோன்ற அகால மரணம் இனிவரும் காலங்களில் ஏற்படக் கூடாது என்றும் பிரார்த்தித்துள்ளனர்.
இன்னுமொரு மாணவரின் உயிர் டெங்கு நோய்க்கு பலியாகும் வரை காத்திருக்காமல், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரிகளிடம் பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மாத்தறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியும் டெங்கு நோய் பரவும் அதிக அபாய வலயப் பகுதியாகக் காணப்படுவதால், தங்களது பிள்ளைகள் மற்றும் அன்பானவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


