Type to search

Editorial

திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ்ப்பாண மக்களின் கருத்தை அறிக!

Share

யாழ்ப்பாணத்தில் இந்திய மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென யாழ்ப்பாண மாநகரசபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எனினும் பண்பாட்டு மையம் நிர்மானிக்கப்பட்டதும் அதனைப் பொறுப்பேற்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையிடம் கேட்ட போது அதனைப் பொறுப்பேற்க அன்றைய மாநகரசபை நிர்வாகம் முன்வரவில்லை.

ஆக, இப்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எங்களிடம் தாருங்கள் என கேட்கின்ற உரிமையை யாழ்ப்பாண மாநகரசபை இழந்துவிட்டது.

தவிர, யாழ்ப்பாண மாநகரசபை நிர்வாகம் அரசியல் கட்சி சார்ந்ததாக இருப்பதன் காரணமாக திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ்ப்பாண மாநகர சபையிடம் ஒப்படைப்பது எந்தவகையிலும் பொருத்தமில்லை.

தவிர, யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் கலாசார மண்டபம்  யாழ்ப்பாண மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டபோது, நாவலர் கலாசார மண்டபத்தில் மாமிசஉணவுகளை வைத்து உண்பதற்கு அப்போது யாழ். மாநகர சபையின் முதல்வராக இருந்த ஒருவர் அனுமதி வழங்கியிருந்தார்.

இதுமட்டுமல்ல, யாழ்ப்பாண நாவலர் கலாசார மண்டபத்தில் மேற்தளத்தில் இந்து நூலகம் இயங்கியது.

ஆனால், யாழ். மாநகரசபையின் ஆட்சியை முன்பு பொறுப்பெடுத்தவர்கள் இந்து நூலகத்தை கந்தறுத்ததுடன் இந்து நூலகத்தின் நுழைவாயில் பகுதியில் உடுபுடைவைகள் உலர விடப்பட்ட சம்பவங்களும் நடந்தாகின.

ஆக, திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ்ப்பாண மாநகரசபையிடம் ஒப்படைப்பதோ அன்றி யாழ். மாநகர சபை அதனைப் பொறுப்பேற்க நினைப்பதோ முறையன்று.

மேலும் யாழ்ப்பாண மண்ணில் நிறுவப்பெற்ற திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாரிடம்  ஒப்படைக்க வேண்டும் என தமிழ் அரசியல் கட்சிகள் கருத்துரைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆம், யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாரால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை யாழ்ப்பாண மக்களே தீர்மானிக்க முடியும்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பது மிக மிக முக்கியம்.

மேலும் இது விடத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தலையிடுவதை இந்தியத் தூதரகம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

அவ்வாறு அனுமதித்தால், அது இந்தியத் தூதரகம் தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கும்.

ஆம், இந்தியாவை நம்புங்கள். இந்தியாவுக்கு வாருங்கள். அங்கு பேசுவோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை உதாசீனம் செய்த தமிழ் அரசியல் தரப்பு திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பில் தலையிடுவதன் நோக்கம் என்ன என்று இந்தியத் தூதரகம் ஆராய வேண்டும்.

ஆக, யாழ்ப்பாண திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பில் எந்தத் தீர்மானத்தை எடுப்பதாக இருந்தாலும் அதனை யாழ்ப்பாண மக்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

இது மிக மிக அவசியமானதாகும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link