பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்
Share
டீசல் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நிகராகப் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக, கடந்த மே மாதம் 3ஆம் திகதி 10 ரூபாயினாலும், மே 30ஆம் திகதி 15 ரூபாயினாலும் லங்கா வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை உயர்த்தப்பட்டது.
ஒரு மாத காலத்திற்குள் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், தமது போக்குவரத்துத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளதாகத் தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சூழ்நிலை குறித்து கடந்த 2ஆம் திகதி பல பேருந்து சங்கங்கள் இணைந்து ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தன. இதன்போது, அதிகரித்துள்ள எரிபொருள் விலைக்கு நிகராக 5% இடைக்காலப் பேருந்து கட்டண உயர்வை வழங்குமாறு அல்லது எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இப்படியானதொரு பின்னணியில், தனியார் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு வருகை தந்திருந்ததோடு, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயலாளர் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலின் பின்னர், பேருந்து சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில்:
“அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் போது அவர் இந்த விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து வெளியில் வந்து தமக்குத் தெரியாதவற்றைப் பேசுவதில் அர்த்தமில்லை. நாளை எங்களுக்குக் கலந்துரையாடல் ஒன்று வழங்கப்படுமா என்று பார்க்கிறோம். இந்த நிலைமை சரி செய்யப்பட வேண்டும். நாளை அமைச்சருடன் பேசி இதில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம். அப்படி இல்லையெனில், அடுத்த வாரம் நாங்கள் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வோம்.”


