Type to search

Headlines Local News News

தெனியாயவில் பரவிய காய்ச்சல்! சுகாதார துறையின் விளக்கம்!

Share

கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் பதிவான காய்ச்சல் ஒரு வைரஸ் நிலை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி என்பன இந்த வைரஸின் அறிகுறிகளாகும். இது பெரும்பாலும் 14 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே பரவியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்டவர்கள் தெனியாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அத்துடன், இந்நோய்ப் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அசுத்தமான நீர் அல்லது உணவின் மூலமாகவே இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கருதுவதாகவும், எனவே குறித்த பிரதேச மக்கள் நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்துமாறும் அவர் வலியுறுத்தினார். 

எனினும், இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் மேலும் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் விளக்கிய விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம: 

“இந்த நோய் Meningitis வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி என்பன இதன் அறிகுறிகளாகும். நேற்று வரை சுமார் 47 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இவர்கள் அனைவரும் தெனியாய ஆதார வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 14, 15 வயதுடைய சிறுவர்களாவர். அவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 3, 4 நாட்களில் இந்நோய்ப் பரவல் ஓரளவுக்கு குறைவடைந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகிறது. முறையான சிகிச்சைகளுடன் 6 முதல் 7 நாட்களில் இந்நோய் குணமடைந்துவிடும். பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு மூலமாகவே இந்த வைரஸ் பரவியுள்ளது. எனவே, அப்பகுதி மக்கள் நீரை கொதிக்க வைத்து ஆறவிட்டு பருகுமாறும், சுத்தமான உணவை உட்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். குறிப்பாக இந்த நோயாளர்கள் தெனியாய பகுதியில் இருந்து மாத்திரமே பதிவாகியுள்ளனர், எனவே ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. நோய் பரவும் அபாயம் தற்போது குறைவடைந்துள்ளது.” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link